மதுரையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.2 லட்சம் நகை-பணம் கொள்ளை
மதுரை:
மதுரை எல்.ஐ.சி. நகர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்தவர் சீதாராமன் (வயது 41). இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூர் சென்று விட்டார். நேற்று அவர்கள் வீடு திரும்பினர். அப்போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கே இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன.
இதுகுறித்து அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். வீட்டிற்குள் இருந்த 11 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், எல்.இ.டி. டி.வி. மற்றும் ரூ.15 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக சீதாராமன் தெரிவித்தார். கொள்ளைப்போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.
அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து கொள்ளையடித்த மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.