திண்டுக்கல்லில் மருந்து விற்பனை பிரதிநிதி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சரகம் மாலைப்பட்டி ரோடு சுப்புராமன் பேட்டை சக்திநகரை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி (வயது 40). மருந்து விற்பனை பிரதிநிதியாக உள்ளார்.
இவர் கடந்த 20-ந் தேதி தனது மனைவி தங்கரேகா, மகன்கள் விமல், சோலை ஆகியோருடன் திருப்பதிக்கு சென்று விட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் கேட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
அங்கு உள்ள பீரோவை உடைத்த அவர்கள் அதில் இருந்த நகை மற்றும் பணத்தை சுருட்டி கொண்டு தலைமறைவானார்கள்.
இன்று காலை நாராயணமூர்த்தி ஊருக்கு திரும்பினார். கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறிக்கிடந்தது. பீரோதிறந்தபடி காணப்பட்டது.
பீரோவை பார்த்த போது அதில் இருந்த 25 பவுன் நகை, ரொக்க பணம் ரூ. 8,500 ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த நாராயணமூர்த்தி இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் செய்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் ஆகியோர் வழக்குபதிவு செய்தனர். கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்பநாய் ரூபி வரவழைக்கப்பட்டது. அது வீட்டில் இருந்து சாலை ஓரம் நின்று கொண்டது. கை ரேகை நிபுணர் சீனியம்மாள் கொள்ளையர்களின் ரேகையை பதிவு செய்து உள்ளார். கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தெரிவித்து உள்ளார்.