செய்திகள்

திருக்கனூர் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை - மின்சாரம் துண்டிப்பால் பொதுமக்கள் அவதி

Published On 2019-04-23 10:12 GMT   |   Update On 2019-04-23 10:12 GMT
திருக்கனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு இடி - மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
திருக்கனூர்:

புதுவையில் பிப்ரவரி மாதம் முதலே கோடை வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

காலை 9 மணிக்கே வெயில் தாக்கம் தொடங்கி விடுகிறது. நேரம் செல்ல, செல்ல வெயிலின் உக்கிரம் அதிகரித்தபடியே உள்ளது. இதனால் பகல் வேளையில் வெயிலுக்கு பயந்து பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர்.

இதற்கிடையே கடந்த 3 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வரும் நிலையில் புதுவையில் மழை பெய்யவில்லை. இதனால் இரவு வேளையில் ஏழை மக்கள் மற்றும் நடுத்தரமக்கள் புழுக்கத்தினால் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் திருக்கனூர் பகுதியில் நேற்று நள்ளிரவு 12.30 மணியளவில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மழை கொட்டியதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசினாலும் மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். திருக்கனூர் கடை வீதியில் மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது.

திருக்கனூர் பகுதியில் பலத்த மழை கொட்டிய நிலையில் புதுவை நகர பகுதியில் சிறிய தூறல் மழை மட்டுமே பெய்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News