செய்திகள்

இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - திருச்சி விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

Published On 2019-04-23 08:21 GMT   |   Update On 2019-04-23 08:21 GMT
இலங்கை குண்டுவெடிப்பு எதிரொலியாக திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். #SriLankablasts
கே.கே.நகர்:

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா, துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் ஏராளமான பயணிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

பயணிகள் அனைவரும் விமான நிலையத்தில் உள்ள மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளின் சோதனைக்கு பிறகே விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் விமான நிலைய வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திர தினம், குடியரசு தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்படுவதோடு, பார்வையாளர் மாடமும் மூடப்படும்.

இந்த நிலையில் இலங்கையில் நேற்று நடைபெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் 310 பேர் பலியான சம்பவத்தையடுத்து இந்தியா முழுவதும் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். பயணிகள் கொண்டு வரும் பொருட்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே, போலீசார் அவர்களை அனுப்பி வைக்கின்றனர். மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய் மூலமும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. #SriLankablasts

Tags:    

Similar News