செய்திகள்

சேலத்தில் கொத்தனார் அடித்து கொலை

Published On 2019-04-23 04:57 GMT   |   Update On 2019-04-23 04:57 GMT
சேலத்தில் கொத்தனார் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை பாபு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 60). கொத்தனார். இவருக்கு பெருமாயி, மாதம்மாள் என்ற 2 மனைவிகள் உள்ளனர். மாதம்மாளுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெருமாயிக்கு குழந்தைகள் இல்லை.

ஆறுமுகத்திற்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் அவர் ஏதாவது பாட்டு பாடிக் கொண்டே இருப்பார். வழக்கம்போல நேற்று இரவும் குடித்துவிட்டு வந்து பாட்டுப் பாடி கொண்டிருந்தார்.

ஆறுமுகம் பாட்டு பாடியது அவரது வீட்டின் அருகில் வசிக்கும் முரளிக்கு (வயது 29)எரிச்சலை ஏற்படுத்தியது. இதனால் முரளி ஆறுமுகத்தின் வீட்டிற்கு சென்று எனது மனைவியை பார்த்து தான் நீ பாட்டு பாடுகிறாய் என்று கூறினார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த முரளி, அவரது தம்பி சரவணன், தாய் மாதம்மாள் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஆறுமுகத்தை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. அப்போது ஆறுமுகத்தின் மனைவி மற்றும் மகன்கள் தகராறை விலக்கிவிட்டு விட்டு தூங்க சென்றனர். காலையில் ஆறுமுகத்தை மனைவி எழுப்பிய போது அவர் இறந்து கிடந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரை தாக்கிய முரளி உள்பட 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் முரளி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் அவர் அடிக்கடி அந்த பகுதியில் உள்ள அனைவரிடமும் தகராறில் ஈடுபட்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News