ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிலாளி எரித்துக் கொலை?
ஸ்ரீபெரும்புதூர்:
சென்னை, ஆண்டார் குப்பம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் விஜய் (வயது 49). ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள வடகால் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
இவர் இரவு பணிக்கு செல்லும் போது கம்பெனியில் உள்ள அறையில் தங்குவது வழக்கம்.
நேற்று இரவு விஜய் வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றார். பின்னர் வேலை முடிந்ததும் மற்ற தொழிலாளர்களுடன் அங்குள்ள அறையில் தூங்கினார்.
அதிகாலையில் தொழிலாளர்கள் எழுந்து பார்த்த போது விஜய் மாயமாகி இருந்தார். அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் கம்பெனி அருகில் உள்ள குப்பை மேட்டில் விஜய் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஒரகடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விஜய் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. மர்ம நபர்கள் அவரை அடித்து கொலை செய்து உடலை எரித்தனரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகிறார்கள்.
இதேபோல் விஜய்யுடன் கடைசியாக இருந்தவர்கள் யார்-யார்? யாருடனும் மோதல் உள்ளதா? என்ற விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.
சென்னை தொழிலாளி குப்பைமேட்டில் எரிந்த நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.