செய்திகள்

மயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்து கொன்ற கணவர் கைது

Published On 2019-04-16 09:37 GMT   |   Update On 2019-04-16 09:37 GMT
மயிலாடுதுறை அருகே குடும்பத்தகராறில் பெண்ணை அடித்து கொன்ற கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறை:

நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வேப்பகுளம் பெரியார் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி (வயது 35) கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தஞ்சையை சேர்ந்த கோடீஸ்வரி (30).இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளான்.

நேற்று மாலை ராஜபாண்டிக்கும், கோடீஸ்வரிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த ராஜபாண்டி கோடீஸ்வரியை அடித்து கீழே தள்ளி உள்ளார் அப்போது தலையில் பலத்த காயமடைந்த கோடீஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இந்த கொலை சம்பவம் பற்றி மயிலாடுதுறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கோடீஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக ராஜபாண்டியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News