செய்திகள்

சத்தியமங்கலத்தில் சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் சாலை மறியல்

Published On 2019-04-15 17:16 GMT   |   Update On 2019-04-15 17:16 GMT
சத்தியமங்கலத்தில் இன்று சீரான குடிநீர் வழங்க வலியுறுத்தி பெண்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்தியமங்கலம்:

சத்தியமங்கலம் பகுதியில் தற்போது பாதாள சாக்கடை பணி நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே குடிநீர் குழாய்கள் உடைக்கப்பட்டு தண்ணீர் வீணாக வெளியே சென்று கொண்டிருக்கிறது.

பல்வேறு இடங்களில் சீராக குடிநீர் வினியோகிக்க படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் சத்திய மங்கலம் அருகே உள்ள வடக்கு பேட்டை, திப்பு சுல்தான் ரோடு, புளியம் கோம்பை ரோடு, கட்டபொம்மன் நகர் உட்பட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதமாக சீராக குடிநீர் விநியோகிக்க படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். தினமும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே குடிக்க வருவதாக குற்றம் சாட்டினார்.

எனவே இதனை கண்டித்தும் சீராக குடிநீர் வழங்க வலியுறுத்தியும் இன்று காலை 9.20 மணி அளவில் அப்பகுதி பெண்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் அத்தாணி ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்தியமங்கலம் போலீசார் மற்றும் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உங்கள் பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் 30 நிமிடம் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News