செய்திகள்
மீஞ்சூர் அருகே 2 வாலிபர்கள் அடித்து கொலை? - கிணற்றில் பிணமாக கிடந்தனர்
மீஞ்சூர் அருகே 2 வாலிபர்கள் அடித்து கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த நாலூர் கலைஞர் நகரில் உள்ள கிணற்றில் 2 வாலிபர்கள் பிணம் கிடந்தது. இதை பார்த்து அப்பகுதி மக்கள் மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து கிணற்றில் கிடந்த 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.
பின்னர் உடல்களை பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் பிணமாக கிடந்தவர்கள் எண்ணூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அப்துல் கபூர். அவரது நண்பரான மீஞ்சூரை சேர்ந்த சம்பத்குமார் என்பதும் தெரியவந்தது.
அவர்கள் உடல்களில் காயங்கள் இருப்பதால் யாராவது முன்பகை காரணமாக அடித்து கொலை செய்து உடல்களை கிணற்றில் வீசி சென்றனரா? அல்லது குடிபோதையில் இருவரும் கிணற்றின் சுவற்றின் மீது அமர்ந்து பேசி கொண்டிருந்த போது தவறி விழுந்து இறந்தனரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.