செய்திகள்

திண்டுக்கல் அருகே ஒரே நாளில் 2 பேர் படுகொலை

Published On 2019-04-08 15:42 IST   |   Update On 2019-04-08 15:42:00 IST
திண்டுக்கல் அருகே ஒரே நாளில் 2 பேர் படு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள கூடலூரைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 35). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். நேற்று இரவு கூடலூர் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மணிவேல் மது குடிக்க சென்றார். அப்போது அவருக்கும் அங்கிருந்த 3 பேர் கொண்ட கும்பலுக்கும் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த அவர்கள் மணிவேலை சரமாரியாக தாக்கி பாட்டிலால் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டனர். அங்கிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதில் மணிவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து குஜிலியம்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மணிவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே உள்ள தவசிமடையைச் சேர்ந்தவர் குழந்தைராஜ் (45). இவரது மனைவி பாக்கியம் (41). இவர்களுக்கு ஸ்டெல்லா (22) என்ற மகளும், சார்லஸ் (21) என்ற மகனும் உள்ளனர்.

கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததால் குழந்தைராஜ் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். பாக்கியம் தனது மகன் மற்றும் மகளுடன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தார்.

நேற்று மாலை தோட்டத்து வீட்டுக்கு சென்ற பாக்கியம் சொத்து பிரிப்பது தொடர்பாக தனது கணவரிடம் பேசினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பாக்கியம் தனது கணவரை அரிவாளால் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே குழந்தைராஜ் உயிரிழந்தார். சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து பாக்கியத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News