செய்திகள்

தந்தையை அடித்து கொன்ற மகன் தாயுடன் கைது

Published On 2019-04-06 17:45 GMT   |   Update On 2019-04-06 17:45 GMT
பல்லாவரம் அருகே குடும்ப தகராறில் தந்தையை அடித்து கொன்ற மகன் மற்றும் தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம்:

பல்லாவரம் பாரதி நகர் அண்ணா தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜன். கார்பென்டர் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி குளோரியா, மகன் அந்தோணி வின்சென்ட் ராஜ்(25).

ராஜனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. அடிக்கடி மனைவி, மகனுடன் சண்டை போட்டு வந்தார். கடந்த 31-ந் தேதி தந்தைக்கும் மகனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

இதில் ராஜனுக்கு தலையில் பலத்த அடிபட்டு சுய நினைவின்றி மயங்கி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ராஜனை அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டதாக கூறி சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடந்த 3-ந் தேதி சிகிச்சை பலனின்றி ராஜன் உயிரிழந்தார்.

இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் முதன் முதலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் எந்த பகுதியில் விபத்து நடந்தது என மனைவி மற்றும் மகனிடம் கேட்ட போது முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர்.

அவர்களிடம் போலீசார் துருவித் துருவி கேள்வி கேட்டபோது பின்பு நடந்த சம்பவத்தைப் பற்றி ஒப்புக்கொண்டுள்ளனர் தற்போது கொலை வழக்காக பதிவு செய்து அந்தோணி வின்சென்ட் ராஜ் மற்றும் குளோரியா ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். #tamilnews
Tags:    

Similar News