செய்திகள்

சேர்ந்து வாழ மறுத்ததால் மனைவியை ஓட ஓட விரட்டி கொன்ற கணவன்

Published On 2019-04-06 14:04 GMT   |   Update On 2019-04-06 14:04 GMT
திண்டுக்கல் அருகே குடும்பம் நடத்த வர மறுத்த மனைவியை கணவர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தார்.

கன்னிவாடி:

கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 52). விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி கருப்பாயி (45). இவர்களுக்கு கார்த்திக் ராஜா என்ற மகன் உள்ளார். இவர் ரெட்டியார் சத்திரம் அருகே உள்ள சுக்காம் பட்டியில் தனது தாத்தா வீட்டில் வசித்து வந்தார். கருப்பாயிக்கும் அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருப்பாயி தனது கணவருடன் கோபித்துக் கொண்டு சுக்காம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். அதன் பின் கணவர் பல முறை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் வரவில்லை.

நேற்று இரவு மனைவியை பார்ப்பதற்காக முருகன் சுக்காம்பட்டிக்கு வந்தார். அப்போது அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இன்று காலை கருப்பாயிகுளத்து வேலைக்கு செல்வதற்காக அங்கிருந்த பெண்களுடன் சென்றார்.

அப்போது மறைந்திருந்த முருகன் மனைவியை அரிவாளால் வெட்ட முயன்றார். உயிருக்கு பயந்து அவர் ஓட முயன்றும் முருகன் விடாமல் விரட்டிச் சென்று வெட்டி சாய்த்தார். இதில் சம்பவ இடத்திலேயே கருப்பாயி உயிரிழந்தார். இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் ரெட்டியார் சத்திரம் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். கொலை செய்யப்பட்ட கருப்பாயி உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாக இருந்த முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் கணவனே மனைவியை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

Tags:    

Similar News