செய்திகள்
ராகுல் ஆட்சிக்கு வந்தால் புதுவை மாநில அந்தஸ்துக்கு முதல் கையெழுத்து போடுவார்- நாராயணசாமி உறுதி
ராகுல் காந்தி பிரதமரானால் முதல் கையெழுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாகத்தான் இருக்கும் என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மங்கலத்தில் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
மத்திய பா.ஜனதா ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டுள்ளது. சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் 3 ஆயிரம் மாணவர்களுக்கு மத்தியில் கலந்துரையாடி, 2 மணி நேரம் மாணவிகள் கேட்ட கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்து, இந்த ஆட்சியின் அவலங்களை எடுத்துக் கூறினார்.
இதேபோல இந்த ஆட்சியில் செய்யப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் குறித்து மோடியால் பேச முடியுமா? கவர்னர் கிரண் பேடியால் புதுவைக்கு என்ன பயன்?
தேர்தல் வந்தால் மட்டும்தான் ரங்கசாமிக்கு மாநில அந்தஸ்து ஞாபகத்துக்கு வருகிறது.
ராகுல் காந்தி பிரதமரானால் முதல் கையெழுத்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவதாகத்தான் இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி.யில் திருத்தம் செய்து ஒரே மாதிரியான வரி, விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.