செய்திகள்

உசிலம்பட்டி அருகே பால் வேன் கவிழ்ந்து டிரைவர் பலி

Published On 2019-03-30 10:18 GMT   |   Update On 2019-03-30 10:18 GMT
மதுரையில் இருந்து தேனி சென்ற பால் வேன் கட்டுப்பாட்டை இழந்து நடு ரோட்டில் கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலியானார்.
உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் பெரியசாமி (வயது 27). இவர் மதுரை ஆவின் நிலையத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார். தினமும் அதிகாலையில் மதுரையில் இருந்து தேனிக்கு சென்று பாலை கொண்டு வருவது வழக்கம்.

அதன்படி நேற்று நள்ளிரவு பெரியசாமி வேனில் தேனிக்கு புறப்பட்டார். உசிலம்பட்டி அருகே உள்ள கொங்குபட்டி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென வேன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதே வேகத்தில் நடுரோட்டில் வேன் தலை குப்புற கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த டிரைவர் பெரியசாமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். வேனில் இருந்த உதவியாளர் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து டிரைவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News