செய்திகள்

ஓமலூர் அருகே, குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

Published On 2019-03-27 18:21 GMT   |   Update On 2019-03-27 18:21 GMT
ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஓமலூர்:

ஓமலூரை அடுத்த பெரியேரிபட்டி ஊராட்சி பெரியேரி பட்டி, ஆதிதிராவிடர் காலனி, தாண்டனூர், ஏரிக்கோடி உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராம பகுதிகளில் தற்போது கடும் வறட்சி மற்றும் வெயில் காரணமாக, நீர்நிலைகள் வறண்டு நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறு மற்றும் திறந்த வெளி கிணறு அனைத்தும் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. எனவே இப்பகுதி மக்கள், மேட்டூர் காவிரி குடிநீரையே நம்பி உள்ளனர். இந்த நிலையில் கடந்த 3 மாத காலமாக காவிரி குடிநீரும் பெரியேரிபட்டி ஊராட்சி பகுதியில் சீராக வினியோகம் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதன்காரணமாக இந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் தண்ணீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினர். இது குறித்து ஓமலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்களும், ஆண்களும் காலிக்குடங்களுடன், ஓமலூர்-தாரமங்கலம் ரோட்டில் அம்மன்கோவில்பட்டி பிரிவு ரோடு அருகே நேற்று திரண்டு வந்தனர். அங்கு அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தொளசம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதன்பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியல் காரணமாக, ஓமலூர்-தாரமங்கலம் ரோட்டில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News