பாகூர் அருகே திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயம்- போலீசில் தந்தை புகார்
பாகூர்:
பாகூரை அடுத்த பெரியகாட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் முருகவேல் (வயது 28). கட்டிட தொழிலாளி. இவருக்கும், பாகூரை அடுத்த குடியிருப்புபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமமூர்த்தியின் மகள் செரினா (25) என்பவருக்கும் கடந்த 1½ மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்ததும் முருகவேல் தனது மாமனார் வீட்டில் தங்கி இருந்து வந்தார்.
இந்த நிலையில் செரினாவுக்கு தனது கணவரை பிடிக்கவில்லை என்று தெரிகிறது. கடந்த 23-ந்தேதி செரினா பாகூரில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்று வருவதாக கூறி சென்றார்.
அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் கவலை அடைந்த தந்தை ராமமூர்த்தி பல இடங்களில் தனது மகளை தேடினார். எங்கும் அவரை காணவில்லை. இதனை தொடர்ந்து ராமமூர்த்தி பாகூர் போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி வழக்குபதிவு செய்து மாயமான புதுப்பெண் செரினாவை தேடி வருகிறார்.
திருமணமான 1½ மாதத்தில் புதுப்பெண் மாயமான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.