செய்திகள்

நெல்லை பஸ் நிலையத்தில் பெண்ணை கடத்த முயற்சி

Published On 2019-03-25 12:09 GMT   |   Update On 2019-03-25 12:09 GMT
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் காதல் ஜோடியை மிரட்டி வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு சுற்றிய காதல் ஜோடியை மிரட்டி, பஸ் நிலையத்தில் சுற்றிய மற்றொரு வாலிபர் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் திடுக் தகவல் கிடைத்தது. அதன் விபரம் வருமாறு:-

பாளை அருகே உள்ள அடைமிதிப்பான் குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (வயது23). இவர் சென்னை பம்மல் பகுதியில் உள்ள ஒரு மரக்கடையில் வேலை பார்த்து வந்தார். அப்போது பம்மல் பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருக்கும், விஜய்க்கும் காதல் அரும்பியது. சமீபத்தில் பிளஸ்-2 தேர்வுகள் அனைத்தும் முடிந்ததால், விஜய் அந்த மாணவியை திருமண ஆசை காட்டி, தனது சொந்த ஊரான அடைமிதிப்பான் குளத்திற்கு கடத்தி வந்தார்.

இங்குள்ள விஜயின் பெற்றோரும், உறவினர்களும், மாணவிக்கு 17 வயதே ஆவதால் திருமணம் செய்து வைக்க முடியாது என்றும், உடனடியாக மாணவியை சென்னையில் உள்ள அவரது பெற்றோரிடம் சேர்த்து விடும்படியும் கூறி வீட்டை விட்டு வெளியே அனுப்பினர்.

இதனால் எங்கு செல்வது என்று தெரியாமல் நேற்று முன்தினம் இரவு விஜயும், அவரது காதலியும் புதிய பஸ் நிலையத்தில் சுற்றி சுற்றி வந்தது தெரியவந்தது. அப்போது தான் பஸ் நிலையத்தில் நின்ற வாலிபர் போலீஸ் என்று கூறி அந்த மாணவியை கடத்தி செல்ல முயன்றுள்ளார்.

போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் மாணவியை கடத்தி செல்லவில்லை என்றும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைக்க நினைத்தேன் என்றும் கூறியதால் அவரை விடுவித்தனர்.

இந்த நிலையில் மாணவியை காணவில்லை என்று அவரது தந்தை பம்மல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதனால் மாணவியையும், அவரை கடத்தி வந்த வாலிபர் விஜயையும், பம்மல் போலீசில் ஒப்படைக்க நெல்லை போலீசார் முடிவு செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News