ஆண்டிப்பட்டி அருகே கால்நடைகளுடன் போராட்டம் நடத்திய கிராம மக்கள்
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி யூனியனுக்குட்பட்ட 30 பஞ்சாயத்துகள் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான கண்மாய்கள் மற்றும் சிறு குளங்கள் உள்ளன. மழைக்காலத்தில் மட்டுமே இங்கு தண்ணீர் வரத்து இருக்கும். எனவே தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க திப்பரவு அணை திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அத்திட்டத்தை செயல்படுத்த எவ்வித முயற்சியும் மேற் கொள்ளாததால் வறட்சி காலத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
எனவே கம்பம் முல்லைப் பெரியாற்றில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஆண்டிப்பட்டி கண்மாய்களுக்கு தண்ணீர் கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதன்படி 47 கி.மீ தூரம் குழாய் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்துக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் தேர்தல் அறிக்கையில் இத்திட்டம் இடம் பெற வில்லை.
எனவே இப்பிரச்சினையை வலியுறுத்தி பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் தெரிவித்து கடந்த 4 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 4-ம் நாளாக இன்று கொட்டப்பட்டி கிராமத்தில் கால்நடைகளுடன் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
இதனால் ஆண்டிப்பட்டி யூனியனுக்குட்பட்ட பல கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு கோஷம் பலமாக எதிரொலித்து வருகிறது.