செய்திகள்

புதுவை அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்கு தீவைத்த வாலிபர்

Published On 2019-03-18 10:27 GMT   |   Update On 2019-03-18 10:27 GMT
மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டுக்கு தீவைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான இரும்பை காலனியை சேர்ந்தவர் பாபு (வயது33), எலக்ட்ரிசீயன். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர்.

மதுகுடிக்கும் பழக்கம் உள்ள பாபு அடிக்கடி மதுகுடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வார். அதுபோல் சம்பவத்தன்றும் பாபு மதுகுடித்துவிட்டு வீட்டில் மனைவி கலைவாணியிடம் தகராறு செய்தார். இதனால் கணவருடன் கோபித்துக்கொண்டு கலைவாணி குழந்தைகளை திருச்சிற்றம்பலத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு அனுப்பி விட்டு அவரும் அவரது அண்ணன் ஆனந்து வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவி கோபித்து சென்றதால் ஆத்திரம் அடைந்த பாபு, மனைவியின் ஆடையை எடுத்து தீவைத்து கொளுத்தி தனது கூரை வீட்டில் வீசிவிட்டு ஓடிவிட்டார். இதில் வீடு தீப்பிடித்து எரிந்ததுடன் தீ மளமளவென பரவி அருகில் உள்ள பாபுவின் மாமியார் செல்வராணி வீடு மற்றும் சுப்பராயன் வீட்டிலும் பரவி எரிந்தது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் வானூர் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் 3 வீடுகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் செல்வராணி வீடு மற்றும் சுப்புராயன் வீடுகளில் வைத்திருந்த நகை-பணம் தீயில் கருகி போனது.

இதுபற்றிய புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குபதிவு செய்து பாபுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News