தேனி அருகே பள்ளி மாணவி உள்பட 2 பெண்கள் மாயம்
தேனி:
தேனி அருகே சின்னமனூர் எரசக்கநாயக்கனூர் வடக்கு காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த செந்தில்குமார் மகள் ஹரிணிபிரியா (வயது 17). அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற ஹரிணி பிரியா வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்து நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்துள்ளனர். இரவில் செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஹரிணி பிரியா தன்னை தேட வேண்டாம் என கூறி விட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் பூவரசு என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஹரிணி பிரியாவை தேடி வருகின்றனர்.
பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் குள்ளப்புரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ரவி மகள் அபிதா (வயது 17). சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். தாய் கண் விழித்த போது அபிதா மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் ஜெய மங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் கோட்டார் பட்டியைச் சேர்ந்த சுரேந்தர் என்பவர் மீது சந்தேகம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.