செய்திகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் வாகன சோதனையில் ரூ.40 லட்சம் சிக்கியது

Published On 2019-03-16 05:59 GMT   |   Update On 2019-03-16 05:59 GMT
ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த வாகன சோதனையில் ரூ.40 லட்சம் சிக்கியது.
ராமநாதபுரம்:

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. 50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்பவர்கள் அதற்குரிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக பனைக்குளம் சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் வெளிநாட்டு பணம் உள்ளிட்ட 28 லட் சத்து 50 ஆயிரம் இருந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். வாகனத்தில் வந்த பனைக்குளத்தைச் சேர்ந்தவரிடம் விசாரணை நடைபெறுகிறது.

திருவாடானை கைகாட்டி அருகே வட்டார வளர்ச்சி அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

காரில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் கொண்டு வரப்பட்ட 14 லேப் டாப், 160 கடிகாரம், ரூ.2 லட்சம் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் முகமது யூசுப்பிடம் விசாரணை நடைபெறுகிறது.

சென்னையில் இருந்து கீழக்கரை வந்த ஆம்னி பஸ்சில் சோதனை நடத்தியதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

பரமக்குடி பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சேவுகபெருமாள் தலைமையில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் முறையான ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த 4 பேரிடம் இருந்து ரூ.6 லட்சத்து 22 ஆயிரத்து 145 பறிமுதல் செய்யப்பட்டது.
Tags:    

Similar News