செய்திகள்

முக்கூடல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் விபத்தில் பலி

Published On 2019-03-15 05:58 GMT   |   Update On 2019-03-15 05:58 GMT
முக்கூடல் அருகே அரசு பள்ளி ஆசிரியர் விபத்தில் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆலங்குளம்:

நெல்லையை அடுத்த சுத்தமல்லி பூங்காநகரை சேர்ந்தவர் கோமதி நாராயணன்(வயது56). இவர் ஆலங்குளம் அருகே உள்ள மருதம்புத்தூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வந்தார். தற்போது 10‍-ம் வகுப்பு தேர்வுக்கான பறக்கும் படையில் கோமதிநாராயணன் இடம்பெற்றிருந்தார்.

இதையடுத்து எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்த முதல் நாளான நேற்று கோமதி நாராயணன் மாதாபட்டிணம் மற்றும் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளில் கண் காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். எஸ்.எஸ்.எல்.சி. முதன்முறையாக நேற்று மதியம் தொடங்கியது. இதனால் பணி முடிந்து மாலையில் அவர் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பினார்.

பாப்பாக்குடி அருகே புதுக்கிராமம் என்ற இடத்தில் வந்தபோது திடீரென சாலையின் குறுக்கே நாய் ஓடியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து கோமதிநாராயணன் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரி வரும் வழியிலேயே கோமதிநாராயணன் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி பாப்பாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்வு கண்காணிப்பு பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது விபத்தில் சிக்கி ஆசிரியர் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரை கடும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Tags:    

Similar News