செய்திகள்
சேலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
சேலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கொண்டலாம்பட்டி:
சேலம் வீராணம் அருகே உள்ள மன்னார்பாளையம் எம்.பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 35). இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திவ்யா (29) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதே போல் கடந்த 9-ந்தேதி குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த திவ்யா தனது தாயாரிடம், சீனிவாசன் அடிக்கடி சண்டை போடுகிறார். ஏன் இதுபற்றி நீங்கள் அவரிடம் தட்டிக்கேட்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. பின்னர் திவ்யா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த திவ்யா நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.