செய்திகள்

டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம்

Published On 2019-03-09 12:41 IST   |   Update On 2019-03-09 12:41:00 IST
20 ரூபாய் நோட்டுகளை வீசி டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் 300 பெண்கள் முற்றுகை போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ttvdinakaran #rknagar

ராயபுரம்:

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டி.டி.வி. தினகரன் மக்களிடம் வாக்குகளை வாங்குவதற்காக இருபது ரூபாய் நோட்டை டோக்கனாக கொடுத்து ஒரு வாக்குக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக உறுதி அளித்ததாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் தங்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற வில்லை என்றும் சாலை வசதி, கழிவு நீர், குடிநீர் வசதி என எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தராமல் தினம் தினம் அவதிப்பட்டு வருவதாக குற்றம் சாட்டுகின்றனர்.

வெற்றி பெற்ற பின்பு இதுவரை தொகுதி பக்கம் வந்து பார்க்காமல் மக்களை ஏமாற்றியது போல வரும் பாராளு மன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளில் இதே போன்று மக்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று திரண்டு தண்டையார்பேட்டையில் உள்ள தினகரனின் ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர்.

ஆனால் அலுவலகம் பூட்டப்பட்ட நிலையிலேயே இருந்ததால் ஆத்திரமடைந்த மக்கள் 20 ரூபாய் நோட்டை கையில் வைத்துக் கொண்டு கோ‌ஷங்களை எழுப்பினர். இதனையடுத்து தங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கும் டோக்கன் வேண்டாம் என்று இருபது ரூபாய் நோட்டை அலுவலகத்திற்குள் தூக்கி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


பாராளுமன்றத் தேர்தலில் தினகரனின் சுயரூபத்தை தொகுதி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி தங்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பவர்களுக்கு தாங்கள் வாக்களிக்கப் போவதாக கூறினர்.

தண்டையார்பேட்டையில் திடீரென்று பெண்கள் ஒன்று கூடி ஆர்.கே.நகர் சட்டமன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. #ttvdinakaran #rknagar

Tags:    

Similar News