செய்திகள்

பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்

Published On 2019-02-28 15:49 GMT   |   Update On 2019-02-28 15:49 GMT
பென்னாகரம் அருகே இன்று காலை குடிநீர் கேட்டு பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பென்னாகரம்:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள வட்டுவன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பவளந்தூர் கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் வரவில்லை. இதனால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். 

இது குறித்து அந்தபகுதி பொதுமக்கள் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய கோரி பென்னாகரம் ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை மனு கொடுத்தனர். ஆனால் இதுவரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் பவந்தூர்-ரங்காபுரம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட்டுவன அள்ளி ஊராட்சி மன்ற செயலாளர் ராமசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். பின்னர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த போராட்டத்தால் அந்த வழியாக வந்த பேருந்து ஒன்று சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது.
Tags:    

Similar News