செங்கத்தில் பள்ளி மாணவர்கள் கோஷ்டி மோதல்
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மேலப்பாளையம் பகுதியில் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மாணவர்கள் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது, முன்னாள் மாணவர்கள் சிலர் பள்ளி மாணவர்கள் ஒருதரப்பினருக்கு ஆதரவாக பேசி சக மாணவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பினர் இடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது. இதையடுத்து, ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கியதோடு, நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர்.
ஒருகட்டத்தில் கற்களை எடுத்து சரமாரியாக வீசினார். இதனால் அவ்வழியாக வந்த பொதுமக்கள்,பெண்கள் பள்ளி மாணவிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்த டி.எஸ்.பி.குத்தாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தாக்குதலில் படுகாயம் அடைந்த 2 மாணவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் சமூக விரோத செயலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பிவைத்தனர். பள்ளி மாணவர்களின் கோஷ்டி மோதலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.