செய்திகள்

வில்லியனூரில் பூக்கடை தொழிலாளி லாரி மோதி பலி

Published On 2019-02-25 09:19 GMT   |   Update On 2019-02-25 09:19 GMT
வில்லியனூரில் லாரி மோதியதில் பூக்கடை தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார்.

புதுச்சேரி:

வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்தவர் வீரப்பன். இவரது மகன் விஜயன் (வயது 25). இவர் வில்லியனூரில் உள்ள ஒரு பூக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

நேற்று மாலை இவர் தனது நண்பர்களான மணிகண்டன், அய்யப்பன், ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வில்லியனூர் மேற்கு ரத வீதியில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளை அய்யப்பன் ஓட்டிச் செல்ல, மற்ற 2 பேரும் பின்னால் அமர்ந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி அய்யப்பன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதனால் உயிருக்கு பயந்து விஜயன் மோட்டார் சைக்கிளில் இருந்து எகிறி குதித்தார். இதில் எதிர்பாராத விதமாக விஜயன் லாரியின் சக்கரத்தில் சிக்கி கொண்டார். இதனால் லாரி சக்கரம் விஜயன் உடல் மீது ஏறி இறங்கியது.

இதில் படுகாயம் அடைந்த விஜயனை அவருடன் வந்த நண்பர்கள் மீட்டு அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்த பின் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே விஜயன் பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புனிதராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News