செய்திகள்

கூத்தாநல்லூரில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபர் கைது

Published On 2019-02-24 13:34 GMT   |   Update On 2019-02-24 13:34 GMT
கூத்தாநல்லூரில் பிளஸ்-1 மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள சேகரை கிராமத்தை சேர்ந்தவர் சாந்தா (வயது 48). இவரது 17 வயது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி முதல் திடீரென மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், மகளை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் காணவில்லை.

இதுபற்றி திருவாரூர் மகளிர் போலீசில் அவர் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ் (25) என்ற வாலிபர் , மாணவியை கடத்தி சென்றது தெரியவந்தது.

வாலிபர் விக்னேஷ், மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை திருமணம் செய்த வழக்கு இருந்து வந்தது.

இதுசம்பந்தமாக கடந்த 13-ந் தேதி போலீசார், வாலிபர் விக்னேசை கைது செய்தனர். பின்னர் அவரை நாகை கிளை சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே மாயமான மாணவியை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இந்த நிலையில் வாலிபர் விக்னேஷ், வீட்டில் இருந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

Tags:    

Similar News