செய்திகள்

விருதுநகரில் வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கிய என்ஜினீயரிங் மாணவர் பலி

Published On 2019-02-22 12:08 GMT   |   Update On 2019-02-22 12:08 GMT
வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கிய மாணவர் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.

விருதுநகர்:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பல்லவன்கோவிலைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் யோகேஸ்வரன் (வயது 22). இவர் திண்டுக்கல்லில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

நேற்று விருதுநகர் அருகே கள்ளிக்குடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரிக்கு யோகேஸ்வரன் வந்தார். பின்னர் மாலையில் ரெயில் மூலம் திண்டுக்கல் செல்வதற்காக விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு வந்தார்.

அப்போது திண்டுக்கல் செல்லும் ரெயிலில் ஏறுவதற்கு பதிலாக குருவாயூர் சென்ற ரெயிலில் யோகேஸ்வரன் தவறுதலாக ஏறிவிட்டார். இதையறிந்த யோகேஸ்வரன் சுதாரித்துக் கொண்டு வேகமாக சென்ற ரெயிலில் இருந்து இறங்கினார். இதில் அவர் தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அந்தப்பகுதியைச் சேர்ந்தவர்கள், யோகேஸ்வரனை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே யோகேஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து விருதுநகர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News