செய்திகள்
வருகிற 3-ந்தேதி திருமணம்- புதுமாப்பிள்ளை மாயம்
அனுப்பர்பாளையம் அருகே வருகிற 3-ந்தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுமாப்பிள்ளை மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர்பாளையம் அருகே உள்ள அங்கேரி பாளையத்தை சேர்ந்தவர் சங்கரமூர்த்தி. இவரது மகன் முருகவேல் (வயது 30). பனியன் தொழிலாளி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண்ணுக்கும் முருகவேலுக்கும் திருமண நிச்சயம் நடந்தது. மேலும் வருகிற 3-ந் தேதி திருமணம் செய்வது எனவும் பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டது.
கடந்த 14-ந் தேதி வீட்டில் உள்ளவர்களிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற முருகவேல் இதுவரை வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் அக்கம் பக்கத்தில் தேடியும் எந்த பலனும் இல்லை. இது குறித்து அவரது பெற்றோர் மாயமான தனது மகனை கண்டுபிடித்து தரும்படி அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பனியன் தொழிலாளி முருகவேலை தேடி வருகிறார்கள்.