ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மணல் கடத்திய லாரி பறிமுதல்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது மழை இல்லாததால் நீர்நிலைகள் வறண்டு போய் உள்ளன. இதனை பயன்படுத்தி கும்பல் தொடர்ந்து மணல் கடத்தி வருகின்றன.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மணல் கடத்தல் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தேனி மாவட்ட புவியியல் மற்றும் சுங்கத்துறை தனி வருவாய் ஆய்வாளர் கண்ணன் தலைமையில் அதிகாரிகள் க.விலக்கு- கண்டமனூர் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது டிப்பர் லாரி நிற்காமல் வேகமாக சென்றது.
லாரியை அதிகாரிகள் விரட்டி பிடித்தனர். அதிகாரிகளை கண்டதும் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். சோதனையிட்டதில் வைகை ஆற்றில் இருந்து மணல் கடத்தியது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்து க.விலக்கு போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இது குறித்து முத்தனம்பட்டியை சேர்ந்த டிரைவர் செந்தில் (வயது36), உரிமையாளர் பவுன்ராஜ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.