குடியாத்தம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
குடியாத்தம்:
குடியாத்தம் போஜனாபுரம் ஊராட்சி மேல்சுந்தரகுட்டை பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த சில மாதங்களாக குடிநீர் வினியோகம் சரிவர வழங்கபடவில்லை. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் எந்தவித நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் இன்று காலை குடியாத்தம் மேல்பட்டி செல்லும் சாலை உள்ளிகூட்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதிக்கு குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஆழ்த்துளை கிணறு அமைத்து தர வேண்டும் என்று கூறினர்.
சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.