செய்திகள்

வில்லியனூரில் கணவரின் கடன் தொல்லையால் இளம்பெண் தற்கொலை

Published On 2019-02-18 14:19 GMT   |   Update On 2019-02-18 14:19 GMT
வில்லியனூரில் கணவரின் கடன் தொல்லையால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

நாகர்கோவிலை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது30). இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு புதுவை வந்தார். புதுவையில் தங்கி டெய்லர் வேலை செய்து வந்த போது அரும்பார்த்தபுரத்தை சேர்ந்த ஜெயசுதா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறி பதிவு திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு பெற்றோர் சம்மதத்துடன் நாகர்கோவிலில் முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளது.

இதற்கிடையே வில்லியனூர் மெயின்ரோட்டில் ஒரு வாடகை வீட்டின் கீழ் தளத்தில் டெய்லர் கடையும், வீட்டின் மாடியில் மனைவி, குழந்தைகளுடன் ராஜேஷ் வசித்து வந்தார். டெய்லரிங் தொழிலை மேம்படுத்தவும், வீட்டு செலவுக்கும் ராஜேஷ் பலரிடம் பணம் கடன் வாங்கினார். சுமார் 3 லட்சம் வரை கடன்வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த கடனை திருப்பி கொடுக்காமல் ராஜேஷ் திண்டாடி வந்தார். அதேவேளையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நச்சரித்து வந்தனர். இந்த கவலையை மறக்க ராஜேஷ் மதுகுடிக்க தொடங்கினார். இதனால் கணவன்- மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

சம்பவத்தன்று கடன் கொடுத்தவர்கள் ராஜேஷ் வீட்டுக்கு சென்று பணத்தை கேட்டு தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றனர். அப்போது ராஜேஷிடம் அவரது மனைவி ஜெயசுதா தினமும் விட்டின் படிஏறி கடன் கொடுத்தவர்கள் திட்டிவிட்டு செல்வது அவமானமாக உள்ளதே என்று ராஜேஷிடம் கேட்டுள்ளார். ஆனால் இதனை கண்டு கொள்ளாமல் ராஜேஷ் மதுகுடிக்க சென்று விட்டார். அன்று இரவு வீட்டுக்கு வராமல் ராஜேஷ் மதுக்கடை அருகிலேயே தூங்கி விட்டார்.

மறுநாள் ராஜேஷ் வீட்டுக்கு வந்த போது வீடு பூட்டி இருந்ததால், மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி அவரை தேடவில்லை.

இந்த நிலையில் நேற்று சந்தேகம் அடைந்து ராஜேஷ் வீட்டின் ஜன்னல் வழியே பார்த்தார். அப்போது படுக்கை அறையில் மின்விசிறியில் ஜெயசுதா துப்பட்டாவால் தூக்குபோட்டு உடல் அழுகிய நிலையில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயசுதா தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து ஜெயசுதாவின் அண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், ஏட்டு திவாகரன் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News