செய்திகள்

விபத்துகளில் இறந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம்- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

Published On 2019-02-18 09:38 GMT   |   Update On 2019-02-18 09:38 GMT
பல்வேறு விபத்துகளில் உயிரிழந்த 8 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #Edappadipalaniswami
சென்னை:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

ஈரோடு, காசிபாளையம் கிராமத்திலிருந்து, தனியார் வாகனத்தில் ஏற்றி வந்த வெடி பொருட்கள் வெடித்ததில், கார்த்திக் ராஜா, செந்தூர் பாண்டியன், முருகன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கன்னியாகுமரி, அகஸ்தீஸ்வரம், மதுசூதனபுரத்தைச் சேர்ந்த சகாயம் கடலில் குளித்த போது, அலையில் சிக்கி உயிரிழந்தார். ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தைச் சேர்ந்த ஜெபனேஷ் மீன் பிடிக்கச் சென்ற போது, கடலில் மூழ்கி உயிரிழந்தார்.

வாணியம்பாடி, ஆலங்காயத்தைச் சேர்ந்த மகாலட்சுமி கட்டிடத்திலிருந்து தவறி விழுந்ததில் உயிரிழந்தார். கடையநல்லூர், சேர்ந்த மங்கலம் மற்றும் நயினாகரம் கிராமங்களைச் சேர்ந்த சிறுவன் கிரண், செல்வன் கோபி ஆகிய இருவரும் பட்டாக்குளத்தில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உயிரிழந்த 8 நபர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #Edappadipalaniswami
Tags:    

Similar News