செய்திகள்

பேராவூரணியில் பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் - பயணிகள் கோரிக்கை

Published On 2019-02-15 11:47 GMT   |   Update On 2019-02-15 11:47 GMT
பேராவூரணியில் பழுதடைந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேராவூரணி:

பேராவூரணி அரசு மருத்துவமனை, அரசு வங்கி, தனியார் வங்கி அருகில் உள்ள பயணியர் நிழற்குடை மூலம் கொன்றைக்காடு, காலகம், ஒட்டங்காடு, துர்க்கையம்மன் கோயில், புனல்வாசல், துறவிக்காடு பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் 1000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வந்தனர். மேலும் அரசு மருத்துவமனை,அரசு வங்கி,தனியார் வங்கி மற்றும் கடை வீதிக்கு சென்று தங்கள் ஊருக்கு திரும்ப மழை மற்றும் வெயில் காலங்களில் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிழற்குடை கடந்த 2011-12-ஆம் ஆண்டு முன்னாள் மத்திய மந்திரி பழனிமாணிக்கம் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது ஆகும். இதனை முறையாக பராமரிக்காததால் தரையில் ஒட்டப்பட்ட டைல்ஸ் பெயர்ந்தும், பயணிகள் அமரும் இருக்கைகளை சேதமடைந்த நிலையில் உள்ளது. சில இருக்கைகள் காணவில்லை. இரவு நேரங்களில் மின்வசதி துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளதால் சமூக விரோதிகள் மது அருந்துவது,எச்சில் துப்புவது,புகை பிடித்துக் கொண்டிருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

எனவே தூய்மை இந்தியா திட்டத்தில் பயணியர் நிழற்குடையை சீரமைத்து மின்வசதி செய்துதர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News