செய்திகள்

தொண்டாமுத்தூர் அருகே பட்டபகலில் காவலாளி வீட்டில் நகை-பணம் திருட்டு

Published On 2019-02-15 10:05 GMT   |   Update On 2019-02-15 10:05 GMT
தொண்டாமுத்தூர் அருகே பட்டபகலில் காவலாளி வீட்டில் நகை-பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குபேரபுரியை சேர்ந்தவர் ஆறுச்சாமி (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று காலை இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். வேலை முடிந்ததும் இரவு வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த ஆறுச்சாமி வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அறையில் இருந்த பீரோவை திறந்த மர்மநபர்கள் அதில் இருந்த செயின், மோதிரம் உள்பட 8 பவுன் தங்க நகைகள், ரூ. 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து ஆறுச்சாமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்ம நபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.இதனை வைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.பட்டபகலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News