செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே ஓடை மணல் கடத்தியவர் கைது
ஆண்டிப்பட்டி அருகே ஓடை மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி:
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மணல் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைகையாறு, மற்றும் நீர்நிலைகளில் இரவு பகல் பாராது 24 மணி நேரமும் மணல் கொள்ளை அடிக்கப்பட்டு வருகிறது.
இதனால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் குடிநீருக்காக அலைந்து திரியும் சூழல் ஏற்பட்டுள்ளது. ராஜதானி சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் கொத்தப்பட்டி கண்மாய் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது வேகமாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ஓடை மணல் கடத்தியது தெரிய வந்தது. இது தொடர்பாக கொத்தப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன் (வயது26) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.