செய்திகள்

காடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல்

Published On 2019-02-15 08:17 GMT   |   Update On 2019-02-15 08:17 GMT
காடையாம்பட்டி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காடையாம்பட்டி:

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டியபுரம் கிராமத்தில் ஆசாரிபட்டறை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் சார்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக சரியாக குடிநீர் தண்ணீர் விநியோகம் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தில் பொதுமக்கள் புகார் கூறினர்.

அதற்கு அதிகாரிகள் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தான் குடிநீர் வழங்க முடியவில்லை. பணிகள் சரி செய்து முடித்ததும் உடனடியாக குடி தண்ணீர் வழங்கப்படும் என தெரிவித்தனர்.

ஆனால், அதிகாரிகள் கூறியபடி குடிநீர் சரியாக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து காலி குடங்களை எடுத்துக் கொண்டு வந்து இன்று காலை ஓமலூர்- தின்னப்பட்டி சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். மறியலால் சுமார் 1 மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த ஓமலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, நீங்கள் மறியல் செய்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. பயணிகள் சிரமம் அடைகின்றனர். எனவே நீங்கள் மறியலை கைவிடுங்கள். உங்களது கோரிக்கை குறித்து அதிகாரிகளிடம் பேசி தீர்வு காணப்படும். ஒரு வாரத்திற்குள் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள், போலீசாரின் சமாதான பேச்சுவார்த்தையை ஏற்று சாலை மறியலை கைவிட்டனர்.

Tags:    

Similar News