செய்திகள்

மார்த்தாண்டம் மீன் மார்க்கெட்டில் தொழிலாளி மர்ம மரணம்

Published On 2019-02-11 12:31 GMT   |   Update On 2019-02-11 12:31 GMT
மார்த்தாண்டம் மீன் மார்க்கெட்டில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மார்த்தாண்டம்:

மார்த்தாண்டம் அருகே உள்ள செறுகோல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகுமார் (வயது 40). இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜகுமார் மார்த்தாண்டம் மீன் மார்க்கெட்டில் மீன் இறக்கும் வேலை பார்த்து வந்தார். இதேபோல நேற்று காலை வேலைக்கு செல்வதாக மனைவியிடம் கூறி விட்டு ராஜகுமார் மார்த்தாண்டம் சென்றார். திடீரென மார்த்தாண்டத்தில் இருந்து ராஜகுமாரின் மனைவிக்கு ஒருவர் செல்போனில் பேசினார். உங்கள் கணவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு திடீரென இறந்து விட்டார். அவரது உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ராஜகுமாரின் மனைவியும், உறவினர்களும் குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தனர். அங்கு ராஜகுமாரின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அவர் எப்படி திடீரென இறந்தார் என தெரியவில்லை. எனவே அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திலும் புகார் செய்தனர். புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் நாகர்கோவில் பார்வதிபுரம் அருகே உள்ள களியங்காட்டில் முதியவர் ஒருவர் நேற்று மயங்கி கிடந்தார். அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியவில்லை. இது தொடர்பாக இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News