செய்திகள்

கீரனூர் அருகே தந்தை-மகன் கொலை- கைதான 5 பேரிடம் அதிரடி விசாரணை

Published On 2019-02-09 16:42 GMT   |   Update On 2019-02-09 16:42 GMT
கீரனூர் அருகே தந்தை-மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான 5 பேரிடம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே உள்ள காரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வீராச்சாமி (வயது 70). தொழில் அதிபர். இவரது மகன் முத்து (30). வீராச்சாமிக்கு சொந்தமாக விராலிமலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. 

இந்த நிலையில் களமாவூர் சத்திரத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் ஒன்றிய கவுன்சிலரும், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவருமான மூர்த்தி (52), என்பவர் சில ஆண்டுகளுக்கு முன்பு வீராச்சாமியிடம் இருந்து ரூ.1 கோடியே 25 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். ஆனால் பணத்தை திரும்ப கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. 

இதுதொடர்பாக 2 தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று வீராச்சாமி மற்றும் அவரது மகன் முத்து ஆகியோரை, மூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர் வெட்டிக்கொன்றனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், மூர்த்தி உள்ளிட்ட 15 பேர் கொண்ட கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த கொலையில் தொடர்புடைய வினோத், சிக்கல்குமார், செல்வகுமார் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான மூர்த்தி உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News