செய்திகள்

இளம்பெண்ணின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

Published On 2019-02-09 16:19 GMT   |   Update On 2019-02-09 16:46 GMT
போச்சம்பள்ளியில் இளம்பெண்ணின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட வாலிபரை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
வேப்பனஅள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலூக அனகோடியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கவுரிசங்கர் (வயது 28). இவரும், சூளகிரி அருகே உள்ள திராடி பகுதியைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் ஒன்றாக வேலை பார்த்தனர். இந்த நிலையில் கவுரி சங்கர், அந்த பெண்ணிடம் தனது காதலை தெரிவித்தார். அவருடைய காதலை அந்த பெண் ஏற்க மறுத்து விட்டார்.  

இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கவுரிசங்கர் திராடி பகுதியில் உள்ள இளம்பெண் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரிடம் பெண்கேட்டார். அப்போது பெண்ணின் பெற்றோர் பெண் கொடுக்க மறுத்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த கவுரிசங்கர், இளம்பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு, அவதூறு கருத்துகளை பதிவிட்டார்.

இதுகுறித்து இளம்பெண் சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கவுரிசங்கரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News