செய்திகள்

நடுவட்டம் அருகே டிப்பர் லாரி கவிழ்ந்து டிரைவர் பலி

Published On 2019-02-08 16:25 GMT   |   Update On 2019-02-08 16:25 GMT
நடுவட்டம் அருகே டிப்பர் லாரி கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கூடலூர்:

கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட நியூகோப் பகுதியை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் பாலசுப்பிரமணி(வயது 40). லாரி டிரைவர். நடுவட்டம் அருகே ஆஷிங்டன் பகுதியில் மின்வாரியத்துக்கு சொந்தமான இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து டிப்பர் லாரியில் ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு ஆஷிங்டன் பகுதிக்கு பாலசுப்பிரமணி ஓட்டி வந்தார். பின்னர் கற்களை கொட்டுவதற்காக டிப்பர் லாரியை பின்பக்கமாக இயக்கினார். அப்போது சுமை தாங்க முடியாமல் டிப்பர் லாரி சாலையோரம் உள்ள 100 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. மேலும் லாரி உருண்டு புதருக்குள் சென்றது.

இதில் லாரியின் அடியில் சிக்கி பாலசுப்பிரமணி படுகாயம் அடைந்தார். இதை கண்ட அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்தனர். பின்னர் ரத்த வெள்ளத்தில் ஆபத்தான நிலையில் இருந்த பாலசுப்பிரமணியை மீட்டு நடுவட்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த நடுவட்டம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து பாலசுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து நடுவட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News