செய்திகள்

நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம நிர்வாக அதிகாரியை பொதுமக்கள் முற்றுகை

Published On 2019-02-08 16:09 GMT   |   Update On 2019-02-08 16:09 GMT
புதுக்கோட்டை தைலாநகரில் நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி கிராம நிர்வாக அதிகாரியை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் 16-ந் தேதி கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள மின்கம்பங்கள், மரங்கள் போன்றவை சாய்ந்தன. இதேபோல குடிசைகள், ஓட்டுவீடுகள் போன்றவையும் சேதமடைந்தன. இதைத்தொடர்ந்து தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில், புயல் நிவாரண பொருட்களும், தென்னை மரங்கள் போன்ற மரங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பயிர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், வீடுகள் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது வங்கி கணக்கில் நிவாரண தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுக்கோட்டை மச்சுவாடி தைலாநகர் பகுதியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நிவாரண பொருட்கள் வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் தி.மு.க.வினர் நேற்று தைலாநகர் பகுதிக்கு வந்த கிராம நிர்வாக அதிகாரி அம்பிகாவை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எங்களுக்கு உடனடியாக நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தைலாநகர் பள்ளியில் நிவாரண பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு உள்ளது. நான் ஒவ்வொரு வீடு வீடாக சென்று ஆய்வு செய்துதான் நிவாரண பொருட்களை வழங்குவேன் என கிராம நிர்வாக அதிகாரி அம்பிகா தெரிவித்தார். இதையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News