ஒட்டன்சத்திரம் அருகே லாரி மோதி பள்ளி வேன் டிரைவர் பலி
ஒட்டன்சத்திரம்:
ஒட்டன்சத்திரம் கண்ணன் நகரை சேர்ந்தவர் ராமசாமி மகன் மணிவேல் (வயது33). இவர் காளஞ்சிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிவைராக வேலை பார்த்து வந்தார்.
வேலை முடிந்ததும் பள்ளியில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் ஊர் திரும்பிக்கொண்டிருந்தார். அத்திக்கோம்பை அருகே டீச்சர்ஸ் காலனி பகுதியில் வந்தபோது செல்வம் என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் திடீரென வளைவு பகுதியில் வந்துள்ளார்.
இதனால் நிலைதடுமாறிய மணிவேல் அவரது பைக் மீது மோதி சாலையில் விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த மணிவேல் சம்பவ இடத்திலேயே பலியானார்.
செல்வம் காயங்களுடன் ஒட்டன்சத்திரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.