செய்திகள்

நாமக்கல், சேந்தமங்கலத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2019-02-06 17:22 GMT   |   Update On 2019-02-06 17:22 GMT
ஆவல்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மலர்விழிக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல்:

ஆவல்நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் மலர்விழிக்கு வழங்கப்பட்ட குறிப்பாணையை ரத்து செய்யக்கோரி நாமக்கல் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். 

வட்ட செயலாளர் பிரகாஷ் வரவேற்று பேசினார். வட்டத்தலைவர் செந்தில்கண்ணன், மகளிர் அணி செயலாளர் தமிழரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது பழிவாங்கும் எண்ணத்துடன் குறிப்பாணை வழங்கியதாக கூறி தாசில்தாரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் நாமக்கல் தாசில்தார் அலுவலக வளாகத்தில் வெட்டப்பட்ட மரங்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். முடிவில் பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.

இதேபோல சேந்தமங்கலத்தில் உள்ள தாலுகா அலுவலகம் முன் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலக சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சத்தியசீலன், பொருளாளர் ஆனந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாலுகா அலுவலகத்தில் அரிய வகை மரங்களை வெட்டியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ’ வெட்டாதே, வெட்டாதே தாலுகா அலுவலத்தில் இருக்கும் பச்சை மரங்களை வெட்டாதே’, ‘கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம் நாமக்கல் தாசில்தாரை கண்டிக்கிறோம்’, ‘நடவடிக்கை எடு, நடவடிக்கை எடு மாவட்ட நிர்வாகமே நடவடிக்கை எடு’, ‘ரத்துசெய் ரத்துசெய் தவறாக வழங்கிய குறிப்பாணையை ரத்துசெய்’ என கோஷம் எழுப்பினர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News