மடிப்பாக்கத்தில் போலீஸ்காரர் முகத்தில் ‘ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற கொள்ளையன்
ஆலந்தூர்:
மடிப்பாக்கம், ஆதம் பாக்கம் மற்றும் பள்ளிக்கரணை பகுதிகளில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. எனவே கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சிறப்புபிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மடிப்பாக்கம் போலீஸ் ஏட்டு விஜய்காந்த் பணிபுரிகிறார்.
நேற்று வேளச்சேரி டான்சி நகரில் இவர் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது சைதாப்பேட்டையை சேர்ந்த சுந்தரம் (35) என்பவன் சுற்றித்திரிந்தான். இவன் ஒரு பழைய குற்றவாளி. பல கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவன். எனவே அவனை பிடிக்க விஜயகாந்த் முயற்சி செய்தார்.
அப்போது தபிக்க கொள்ளையன் சுந்தரம் தான் மறைத்து வைத்திருந்த மிளகுதூள் ‘ஸ்பிரே’யை போலீஸ்காரர் விஜயகாந்த் முகத்தில் அடித்தான். இதனால் அவரது கண்கள் மற்றும் முகத்தில் கடும் எரிச்சல் ஏற்பட்டது.
இருந்தும் அவனை தப்பிக்கவிடாமல் அவர் இறுக்கமாக பிடித்து கொண்டார். மடிப்பாக்கம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாண்டிதுரை, போலீஸ்காரர் கவுதம் ஆகியோர் விரைந்து வந்து கொள்ளையன் சுந்தரத்தை கைது செய்தனர்.
மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து தப்ப முயன்ற கொள்ளையனை மடக்கி பிடித்த ஏட்டு விஜயகாந்தை உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.