செய்திகள்

மனைவி பிரிந்த சோகத்தில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2019-01-31 12:38 GMT   |   Update On 2019-01-31 12:38 GMT
திருப்பரங்குன்றம் அருகே மனைவி பிரிந்த சோகத்தில் கோவில் பூசாரி தூக்குப்போட்டு இறந்தார்.

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தனக்கன்குளம் இந்திரா நகரைச் சேர்ந்தவர் தனசேகரபாண்டியன் (வயது 45). இவர் திருவள்ளுவர் நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தார். இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தனசேகர பாண்டியன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் மதுரை மேலூர் அருகிலுள்ள கொட்டாணிப் பட்டியைச் சேர்ந்தவர் குமரேசன் (வயது 38). மாற்றுத்திறனாளி. குடிப்பழக்கம் உள்ள அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. எனவே வாழ்க்கையில் விரக்தி அடைந்த குமரேசன் வீட்டின் குளியலறையில் தீக்குளித்தார்.

அவரை உறவினர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமரேசன் பரிதாபமாக இறந்தார். இது தொடர்பாக கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News