செய்திகள்

புயல் நிவாரணம் வழங்க கோரி தஞ்சை கலெக்டர் முன்பு தரையில் படுத்து உருண்டு விவசாயிகள் போராட்டம்

Published On 2019-01-29 13:53 GMT   |   Update On 2019-01-29 13:53 GMT
கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி தஞ்சையில் கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் படுத்து உருண்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். #GajaStrom
தஞ்சாவூர்:

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார்.

இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிககள் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாரன் கலந்து கொண்டு பேசினார். இதில் அவர் பேசும் போது கூறியதாவது:-

கஜா புயலால் டெல்டா விவசாயிகளின் நிலங்கள், மற்றும் வீடுகள் சேதமானது. இதில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை. அதிகாரிகள் பாரபட்சமக நடந்து வருகிறார்கள்.

இதுவரை புயல் நிவாரணம் பெறாத விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் கக்கரை சுகுமா ரன் மற்றும் விவசாயிகள் சிலர் திடீரென கலெக்டர் முன்பு தரையில் படுத்து உருண்டு, கோரிக்கை வலியுறுத்தி கோ‌ஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதை பார்த்த கலெக்டர் அண்ணாதுரை கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபோல் நூதன போராட்டம் என்ற பெயரில் ஈடுபடக்கூடாது. விளம்பரத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரித்தார்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார், அவரை குண்டுக்கட்டாக தூக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியேற்றினர். #GajaStrom
Tags:    

Similar News