புளியம்பட்டி அருகே விபத்து - பெண் பலி
பு.புளியம்பட்டி:
கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவைக்கு அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இந்த பஸ் புஞ்சை புளியம்பட்டி அருகே விண்ணப்பள்ளி இரட்டை பாலம் அருகே நேற்று நள்ளிரவு வந்த போது எதிரே ஒரு லாரி வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சின் பக்கவாட்டில் லாரி மோதியது.
இதில் பஸ்சின் பின் புற பக்கவாட்டு சீட்டின் ஓரம் அமர்ந்திருந்த லிங்கம்மாள் (வயது65) மற்றும் அவருடன் வந்த நாகராஜ்(45) ரங்கசாமி (40) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனடியாக ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு 3 பேரையும் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே லிங்கம்மாள் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த மற்ற 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் 3 பேரும் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கண் பரிசோதனைக்காக வந்திருந்தனர். பஸ்சில் வந்த போது விபத்தில் சிக்கி உள்ளனர்.
இந்த விபத்து குறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி டிரைவர் லாரியை சத்தியமங்கலத்தில் நிறுத்தி விட்டு தப்பி சென்று விட்டார்.