செய்திகள்

உடையார்பாளையம் அருகே பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்

Published On 2019-01-25 16:15 GMT   |   Update On 2019-01-25 16:15 GMT
உடையார்பாளையம் அருகே பஸ் வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடையார்பாளையம்:

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே உள்ள ஜெ.சுத்தமல்லி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ- மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர். இந்த நிலையில் காலை, மாலை நேரத்தில் பள்ளி முடிந்து பஸ்சுக்காக நீண்ட நேரம் மாணவ- மாணவிகள் காத்திருந்து வீட்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பள்ளி விடும் நேரத்திலும், பள்ளிக்கு மாணவர்கள் வரும் நேரத்திலும் பஸ் வசதி கேட்டு ஜெ.சுத்தமல்லியில் மாணவ-மாணவிகள் நேற்று விளாங்குடி- தா.பழூர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விளாங்குடி- தா.பழூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
Tags:    

Similar News